Monday 12 May 2014


"    நீ  முன்னாலே  போனா  ,    
நா  பின்னாலே  வாரேன் ... "  (  VGK 14    ) 



திரு.  வை. கோபாலகிருஷ்ணன்  அவர்களால்.  
விமர்சனப் போட்டிக்காக   தேர்ந்தெடுக்கப் பட்ட  கதை ,
வர் எழுதிய ,  
"  நீ  முன்னாலே  போனா.  நா... பின்னாலே  வாரேன் ..  "

அதற்கான  இணைப்பு :

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html



80 வயதைக் கடந்த  பெரியவரை ,  அவரது  மகனே  முதியவர்  இல்லத்தில்  விட்டுச் செல்லும்  நிகழ்ச்சி . 



தன் மனைவி இறந்த  பதினைந்தாவது  நாளில்  முதியோர்  இல்லத்திற்கு  வரும்  பெரியவரின்  மேல்  உள்ள  குற்றச் சாட்டு,  அவரின்  மனைவியின்  இறப்பிற்கு  அவர்தான்  காரணம்.  குற்றமும், குறையும்  கூறியவர்கள்,  அவர் பெற்றெடுத்த மக்கள். 




வசதியாக  வாழ்ந்த  பெரியவர் , தன்  மனைவிமேல்  மிகுந்த  பற்றுடையவராகச்  சித்தரிக்கப் பட்டிருக்கிறார். நல்ல  உணவுகளைத் தேர்ந்தெடுத்து , விருப்பமுடன்  வாழ்ந்திருந்த  அவர்களின்  வாழ்க்கையில்  குறுக்கிட்டது  சர்க்கரை  நோய்.  விரும்பியதை  உண்ண முடியாத நிலை. நோயின் தாக்கமும், உணவுக் கட்டுப்பாடுகளும் , அவர்களுக்கு  தாம் விரும்பிய  உணவுப் பொருட்களின்  மேல் ,   தீராத  ஏக்கத்தை       ஏற்படுத்துகிறது.   
இந்த             சூழ்  நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவு " இறப்பதற்கு முன் தாம் 
விரும்பிய  அனைத்துப் பொருட்களையும்  உண்ண வேண்டும்  "




இறந்தவர்களுக்காகசெய்யப்படும் ,சிரார்த்தங்களிலோ ,திதிகளிலோ   அவர்களுக்குப் 
பிடித்தமானவற்றைப்  படைப்பதுதானே  இன்றைய  வழக்கமாய்  இருக்கின்றது .  

அப்போது ,  என்னுள்  தோன்றிய  கருத்து , " உயிருடன்  இருக்கும்போது 
கொடுக்கமறுத்த  உணவு வகைகளை,  ஏன்  படைக்க வேண்டும் ? " 

போர்க்களத்தில்,  எதிரியின்  மரணத்தை  பார்க்கும்,  
படை வீரனின்  மன நிலை  வேறு .

மரணத்துடன்  போராடும்  தன் தாயைப்  பார்க்கும்,
மகனின்  மன நிலை  வேறு .

சுமார்  50 வருடங்களுக்கு மேல்  தன்னுடன் வாழ்ந்த , 
தான்  மிகவும்  அன்பு செலுத்திய  மனைவியின்  மரணத்தை 
பார்க்கும் ,  கணவனின் மன நிலை  வேறு .  இது , தன்னில் 
மறு பாதியாக  வாழ்ந்தவளின்  மரணம். 

தன்  மனைவியின்  ஆயுள்  இன்னும்  நான்கு நாட்கள்  என்று 
வரையறுக்கப்பட்ட  நிலையில், மனைவி  விரும்பிய  
உணவு  பொருட்களை  கொடுத்த  பெரியவரை  குறை  சொல்ல 
முடியவில்லை  என்னால்.  

தனி மரம்  தோப்பாகாது ,   நான்  யாரை  சாட்சிக்கு  அழைப்பது ?
யோசித்தேன் ! 

கீதை ! ...  இல்லை ..  குருஷேத்திரத்தில்  நடந்தது  ,  போராளிகளின் 
மரணம்.

"பளிச்"  என்று  தோன்றியது,  " மாதரி ".  
பெண் வேட்கை , கணவனைக் கொல்லும் என்று  தெரிந்திருந்தும் ,
கணவனின்  ஆசைக்கு  உடன்பட்டவள். மாதரியை  யாராவது  குறை
 கூறியிருக்கிறார்களா என்றும் யோசித்தேன். மாதரியை  குறை  
கூறக் கூடிய  தகுதி வாய்ந்த  ஒரே  பாத்திரம்  தருமன். அவனுக்கும்  
ஒரு சந்தர்ப்பம்  கிடைத்தது,  வன வாசத்தின் போது .  அப்போதும்  தருமன் 
தன் நிலை  பிறழவில்லை. 

என்  எண்ணங்களை  கோர்வைப் படுத்தி,  கூறை கூறிய , 
பெரியவர்  பெற்ற   செல்வங்களை  முன்னிலைப் படுத்தி, 
ஒரு  மேடைப் பேச்சாக   விமர்சனத்தை   எழுதினேன். 

என்  எண்ணங்களும், கருத்துக்களும்  ஏற்கப்பட்ட நிலையில்,  
என்  எழுத்துக்கள்  இரண்டாம்  பரிசை  பெற்றிருக்கிறது . 

என்னை  எழுதத் தூண்டிய  திரு. வை. கோபாலகிருஷ்ணன் 
அவர்களுக்கும்,  என் கருத்துக்களையும்  அங்கீகரித்து 
என்னை  பரிசுக்கு  உரியவனாக்கிய  நடுவர் அவர்களுக்கும் ,
என்  மனமார்ந்த  நன்றிகள் ..

அதற்கான  இணைப்பு  :  

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-14-02-03-second-prize-winners.html


பரிசு பெற்ற  என் கருத்துக்கள் ,  இதோ ! 

0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

இடம் :                                     இணைய  தளத்தின்  கருத்தரங்கம் .

இன்றைய தலைப்பு:        "   நீ  முன்னாலே  போனா 
                                                      நா  பின்னாலே  வாரேன் ... "
                                                   என்ற  திரு. VGK  அவர்களின்  சிறு கதையும்
                                                   அதில் உள்ள  நிகழ்வுகளும்.

குழுமியிருப்போர் :           திரு. நடுவர் அவர்களும்,
                                                   படைப்பாளி  திரு. VGK  அவர்களும்.
                                                   விமரிசக  வித்தகர்களும்,
                                                   வாசகர்களும்,  மற்றும் கதையில்  பங்கேற்ற
                                                    சில, பல கதா பாத்திரங்களும்.

குழுமியிருக்கும் அனைவருக்கும்  என் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு என்   கருத்துக்களை  பகர்கின்றேன் !



இதற்கு முந்தைய படைப்பில்,    வாசகர்கள்  அனைவரையும்  வயிறு குலுங்க
சிரிக்க வைத்து,  ஊடே  சிந்திக்கவும் வைத்து,   சாதனை  புரிந்த  கதாசிரியர் ,   அடுத்ததாக, வாசகர்களின் நெஞ்சை  உலுக்கி, மிகவும் கனக்க  வைத்த,   அற்புதமான   காவியத்தைப்   படைத்து, மற்றுமொரு  சாதனை  புரிந்திருக்கிறார் ! !      அவருக்கு   என்   மனமார்ந்த வாழ்த்துக்கள் !

" தந்தை  தாய்  பேண் "  என்ற  மூதாட்டியின்  மூதுரையை ,  அனைவருக்கும்
நினைவுறுத்தும்  வகையில்,  இக்காவியத்தை  ஒரு  முதியோர்  இல்லத்தில்
தொடங்கி,  தனயனே  தந்தையை  முதியோர்  இல்லத்தில்  விட்டு செல்வது போன்றதொரு   காட்சியை அமைத்த நேர்த்தியை  பாராட்டுகின்றேன் !

ஒரு  படை  வீரனின்  கடமை,   " நாட்டைக் காக்க  போர்களத்தில்  போராடுவது மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கும்   தக்க தருணத்தில்  உதவுவதும்கூட  "  என்ற கருத்தினை  வலியுறுத்தும் வகையில்,
' பெரியவரை '   ராணுவத்தைச்  சார்ந்த ஒரு  அதிகாரியாக படைத்து, முதியோர் இல்லத்தில்  சேர்ந்த மறு  நாளே, ஒரு நோயாளிக்கு  முதல் சிகிச்சை அளிக்கும் மனித நேயமுள்ள ஒரு கண்ணியவானாக  காட்டியிருக்கும்  அழகை,   ஆராதிக்கிறேன் !

 ஒளிரும்   விளக்கை  வாழ்க்கைக்கும்,  எண்ணெயையும், திரியையும்  கணவன், மனைவிக்கும்   உவமையிட்டு , இதில்  எது  முந்தினாலும்,  மற்றவரின்  வாழ்க்கையில்  ஒளி  மறைந்து போகும்  என்ற  யதார்த்தத்தை ,      //  எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள்.//  என்ற  பெரியவரின்  வார்த்தைகளால் கோடிட்டு காட்டிய   விதத்தை
பாராட்டுகின்றேன் !

கண்டிப்புடன்  இருந்ததினால் . பெற்ற  பிள்ளைகளும்  பெரியவரை 
விட்டு சற்றே விலகியிருக்க, 
அதை ஒரு  குறையாக  காட்டாமல்,  

பெரியவரின் மனைவி,   தன் பிள்ளைகளை  நேசித்ததையும், 
மருமகள்களை,  பெற்ற பெண்களைப்போல்  சீராட்டியதையும், 
மருமகனை  கொண்டாடியதையும்  விவரித்த விதத்தில் , 
மனைவிக்கு கிடைத்த  புகழாரமெல்லாம்  தனக்கும்
 கிடைக்கவில்லையே  என்ற   பெரியவரின் ஏக்கம்  தொனித்தாலும்,   

//////      அனைவரையும்  அரவணைத்துச்  சென்று , அன்பு செலுத்தி , 
அனைவரிடமும் நல்ல பெயர்  வாங்குவது என்பது என் மனைவிக்கு  
மட்டுமே  வாய்ந்த  கை வந்த கலை !     //////
என்ற  பெரியவரின்  பெருமிதம் வாய்ந்த  சொற்களால், 
எல்லா  புகழாரங்களும், அவளை  மணம்  புரிந்து, அவளின்  
சரிபாதியாக  நின்ற பெரியவருக்கும்  உரியதே    என்றதொரு  
எண்ணம்  தொக்கி நிற்குமாறு   அமைத்த விதம் ,  மிக மிக அருமை ! 

நல்ல, சுவையான   உணவுகளை  உண்ணவேண்டும்  என்ற  சராசரி 
மனிதனின்  ஆசைகளை விவரிப்பதற்காக   ,  பல சுவையான உணவு வகைகளையும் ,  
பழரச  வகைகளையும்  பட்டியலிட்டு , அவைகளை தயாரிக்கும் முறை,  
பக்குவப் படுத்தும் முறை ஆகியவற்றையும்  விவரமாக  விளக்கிய  விதம்  அருமை !

அதே மனிதனுக்கு  வசதிகள் இருந்தும், வாய்ப்புக்கள்  இருந்தும், 
நோய்களின்  தாக்கத்தால்,  அத்தகைய  உணவுகளை    புறக்கணித்தே   
ஆக வேண்டும்  என்ற  கட்டாயத்திற்கு  அவனை ஆட்படுத்தப்படும்போது, 
அம்மனிதனின்  ஏக்கங்களையும், மன ஓட்டங்களையும்  
விவரித்த்  விதமும்...    மிகமிக  அருமை !

கதையின்  ஊடே,   
 தன்  மரணத்தை  முன்கூட்டியே  அறிந்த  ஒரே  மனிதன்  பரிஷித்துவின் கதையை  இணைத்து ,  அவன்  தன்  கடைசி  ஏழு  நாட்களை பாகவதத்தை  கேட்பதில்  செலவிட்டு ,  ஏழாம்  நாள் உயிர்  நீத்ததை    விவரித்துவிட்டு,  அதேபோல்  பெரியவரும்  பாகவதத்தை  ஏழு நாட்கள் கேட்டு  ரசித்து ,    ஏழாம்  நாள்  இறுதியில்  உயிர்  நீத்ததை    விவரித்த விதம்  அனைத்து  வாசகர்களின்  நெஞ்சத்தையும்  உலுக்கிவிட்டது  ! 

 வாசகர்களின்  கலங்கிய  கண்களின்  ஓரத்தில்  துளிர்த்த,   

ஒவ்வொரு  சிறு துளி  கண்ணீரும்  பறை  சாற்றும் ,  
இந்த   படைப்பாளியின்   சாதனையை !

எலும்புக்கும்  சதைக்கும்  மருத்துவம்  கண்டேன் !
இதற்கொரு  மருந்தைக் கண்டேனா ?
இருந்தால்  அவளை  தன்னந்தனியே 
எரியும்  நெருப்பில்  விடுவேனா ?  
என்ற  பாடலின் வரிகள்  படைப்பாளியின்  மனதில்  ஆழ்ந்த
சலனத்தை  ஏற்படுத்தியிருக்க வேண்டும் !  அதன்  எதிரொலிதான்,
பெரியவர்  தன்  சொத்தை , மருந்துகளின்  ஆராய்ச்சிற்காக
எழுதி வைத்திருப்பது .    இதன்   நோக்கம் ,  படைக்கப்பட்ட
 கதா பாத்திரத்தின்   ஏக்கத்தையும் , எண்ணங்களையும்  மேன்மைப் படுத்துவதற்காக  அமைக்கப்பட்டதுபோல்  இருந்தாலும்,
படைப்பாளியின் இந்த கருத்து 
சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று !
வரவேற்கப்பட வேண்டிய  ஒன்று !   
வாழ்த்தப்பட வேண்டிய  ஒன்று !


இந்த  காவியத்தில்  அமைக்கப்பட்ட   காட்சிகளை  நிகழ்வுகளாகக் 
கொண்டு ,  அதில்  பங்கேற்ற  சில  கதா பாத்திரங்களுக்கு  சிலவற்றை  
கூற  விழைகின்றேன் !

முதன் முதலாக, 

பெரியவர்   முதியோர்  இல்லத்தில்  அடியெடுத்து  வைத்த  நாளிலிருந்து, 
அவரின்  இறுதி மூச்சு வரை அவரை தொடர்ந்து, கண்காணித்து, அவரைப் 
பற்றிய விவரங்களை  மற்றவர்களுக்கு  வெளிச்சம் போட்டு காட்டிய 
திரு. " அரட்டை" ராமசாமி  அவர்கள் !

அரட்டை அரங்கத்தில்  கலந்து கொள்ள  ஆசைப்பட்டு,  வாய்ப்பு  கிடைக்காததால்  " அரட்டை "  என்ற பட்டப் பெயருடன்  வலம் வரும் 

திரு. ராமசாமி அவர்கள் !

அந்த  அரட்டை  அரங்கம்,   வீணே  கதை பேசி  காலத்தை  கழித்த  

அரங்கமல்ல !  தமிழகத்தின் சீரிய  சிந்தனையாளர்களை,  நல்ல உள்ளங்களை, சாதனையாளர்களை, திறமைசாலிகளை,  விடா முயற்சி 
கொண்டு உயர்ந்த  உத்தமர்களை,   உலகுக்கு  வெளிச்சம் போட்டு காட்டிய  அரங்கம் !

"  அந்த  அரங்கம்  வாய்ப்பு கொடுக்காவிட்டால் என்ன ?  
நான்  தருகிறேன் மற்றுமொரு  சந்தர்ப்பம் ! 
இதோ  ஒரு மா மனிதன் !  
இவனை , இனம் பிரித்து காட்டு
என்று  இறைவன்  கொடுத்த சந்தர்ப்பத்தை  சரியாகப் பயன்படுத்தி, 
பெரியவருடன் பேசி, ஒரு துப்பறிவாளனைப்போல் அவருடைய  
உடைமைகளை  ஆராய்ந்து, அவரைப் பற்றிய உண்மைகளையும், 
எண்ணங்களையும்  எங்களுக்கு  அறிமுகப்படுத்திய  உங்களுக்கு,
ஆயிரம்  கோடி  நமஸ்காரங்கள் !

ஒரு வேளை, "   இந்த  பெரியவரும்,  நம்மைப் போன்ற , பிள்ளைகளால் 

கை விடப்பட்ட  மற்றொருவர்   "   என்று எண்ணி, நீங்கள்   வாளாது  இருந்திருந்தால் , அவரைப் பற்றிய உண்மைகள்  மறைக்கப்பட்டிருக்கும்.

மகா  பாரதத்தில் , பதினெட்டு  நாள்  போர்களையும் திருதராஷ்டிரனுக்காக  நேர்முக  வர்ணனை  செய்த  
சஞ்சயனைப் போல் , பெரியவர்,   முதியோர்  இல்லத்தில் இருந்த 
அனைத்து நாட்களிலும், அவரைப் பற்றிய செய்திகளை  மற்றவர்களுக்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்த  உங்களுக்கு மனமார்ந்த  நன்றிகள் !

பாகவதம்  முடிந்த  ஏழாம்  நாள் ,  தன்  அறையில் அமர்ந்திருந்த  பெரியவர்,   மடிமேல்  தன்  மனைவியின் போட்டோவை  வைத்துக் கொண்டு, ஒவ்வொரு  சொட்டாக ஊற்றி , " குடி குடி " என்று சொல்லிய விதத்தில், பெரியவர் தன் மனைவிமேல்  கொண்ட 
பாசத்தையும், நேசத்தையும், பரிவையும் , காதலையும்,  நேரில்  கண்டு  அதிர்ந்து,  
அதன் பின்னர், சில மணி நேரத்தில்  உயிர் நீத்த  பெரியவரின் மரணத்தையும்  நேரில் 
கண்டு  கலங்கி. மூன்று  நாட்கள்  மௌனம்  காத்த  உத்தமரே ! 
உங்களுக்கு  ஆறுதல் சொல்ல,  வார்த்தைகள்  இல்லை என்னிடம் ! 

ஆயினும்,    ஒன்று  சொல்வேன் !
"  நல்லாரைக் காண்பதுவும்  நன்றே "   என்றாள்  அந்த  மூதாட்டி ..!
நீங்கள்  இந்த  நல்லவரை  கண்டதுமட்டுமல்ல.......
அவருடன்  பேசியும், பழகியும் .......
புண்ணியம்  செய்தவர்  ஐயா  நீங்கள்  ! ! 


அடுத்ததாக,

பெரியவர்  பெற்றெடுத்த  பெருஞ்செல்வங்களே !

"குழந்தையும்  தெய்வமும்  கொண்டாடும்  இடத்தில் "  என்பார்கள்.

உங்கள்   தாய்,      உங்களைக்   கொண்டாடி   மகிழ்ந்தது ,
நீங்கள்  கொண்டவர்களையும்  கொண்டாடியது     அனைத்தும் ,
அவரைக்  கொண்டவன்,
அவரை  கொண்டாடியதால்  அல்லவா ?

உங்கள் தாயின்  மறைவு,  உங்களை  மிகவும்  பாதித்திருக்கிறது
என்பதனை   நான்  நீக்கமற  அறிவேன் !

மரணத்தை  முன்னரே  அறிந்தவர்  எவருமிலர்,  ஒருவனைத் தவிர.
அதனை   அறிந்த  ஒரே ஒருவன் , பரிஷித்துவின்  கதை,   உங்களுக்கு
தெரியும்.

 நீங்கள்  மறந்த,
 ஆனால் ,
உங்களைப்  பெற்றவர்களின் மனதில் ஓடிய,
மற்றொரு கதையை, உங்களுக்கு நினைவூட்டுகிறேன் !

மகா பாரதத்தில்,
மான்  உருவம் கொண்டு  போகித்திருக்கும்  முனிவனை,
மானெனக் கருதி   கொன்றதனால்,
" போகிக்கும் போது  மரணம் "  என்ற சாபத்தைப் பெற்றவன்,
பாண்டு.

இதனால் , மந்திரத்தை உபயோகித்து  மக்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்
என்று குந்தியையும், மாதரியையும்  நிர்பந்தித்து, மக்களைப் பெற்ற பின்,
பெண் வேட்கைக்கு  ஆளாகிறான்,  பாண்டு.
(  பாண்டுவின்   இரண்டாவது மனைவியை    " மாத்தரி" என்று  வில்லிபுத்தூராரும், 
" மாத்ரி " என்று  மற்றவரும்  குறிப்பிட்டுள்ளனர்,  நான், சில உபன்யாசங்களில் கேட்டுப் பழகிய 
 " மாதரி " என்ற  வார்த்தையை  உபயோகித்திருக்கிறேன், பிழையிருப்பின்  மன்னிக்கவும் )


கொண்டவனின்  வேட்கையை தணிக்க, 
மாதரியும்  உடன்படுகிறாள்.

அவளுக்கு தெரியாதா, பெண் வேட்கை,  
கொண்டவனைக் கொல்லும்  என்று ?

தெரிந்தும்  சம்மதிக்கிறாள் !

பாண்டு மரிக்க, உடன்கட்டையேறுகிறாள், மாதரி !

குந்தியோ  அல்லது  மற்றவர்களோ  தன்னை தூற்றுவார்களோ என்ற எண்ணம்  மனதில் தோன்றினாலும், கணவனின்  விருப்பத்தை  பூர்த்தி செய்வதே தன் கடமை என்று  எண்ணி, அச்செயலின் பலனை எதிர்பாராமலும், பொருட்படுத்தாமலும்,  மனைவியாக  தன் கடமையை செய்த  மாதரி , இந்நிகழ்விற்கு பல ஆண்டுகளுக்குப் பின் , குருஷேத்திரத்தில்         
 "   கடமையைச் செய் , பலனை எதிர்பாராமல்  "  என்ற   கண்ணனின்  கீதைக்கு,       வித்திடுகிறாள் .  

மாதரியின்  செயலை, அன்று  குறை கூறியவர்கள்  
யாரும் இல்லை.

தருமனுக்கு தெரியாதா , தன் தந்தையின்
 மரணமும், அதன் காரணமும்.?

என்றும் குறை கூறியதில்லை, 
தன் சிற்றன்னையைப் பற்றி !

வனவாசத்தின் போது,  நச்சு நீர் அருந்தி, தம்பியர்  நால்வரும் வீழ்ந்து
கிடக்க, யட்சனாய் வந்த  தர்ம தேவதைக்கு  சரியான பதிலளித்த
தருமனுக்கு கிடைத்த  பரிசு,  " தம்பியர் நால்வரில், ஒருவனை   மட்டும்
உயிர்பித்துக்கொள் " என்று.    

தருமன் நகுலனைத் தேர்ந்தெடுக்க.  ,காரணம் கேட்டது, தரும தேவதை.

" குந்திக்கு  நானிருக்கிறேன் ,  மாதரிக்கு நகுலன்  வேண்டும் "
என்று பதிலளித்த  தர்மவான், தருமன்.

எந்நிலையிலும்,  தன் நிலை  பிறழாத தருமன் , என்றும் பேதம்
பார்த்ததில்லை , தன் அன்னைக்கும், சிற்றன்னைக்கும் !

அத்தகைய  தருமன் போற்றிய , மாதரி  வழி நின்ற கர்ம  வீரன் ,
உங்கள்  தந்தை!

அன்றைய குருஷேத்திரத்தில்,   மரணத்தை  எண்ணிக்  கலங்கிடும்
வீரனாக சித்தரிக்கப்பட்டவன்  ,  விஜயன் .

இன்றைய  நிகழ்விலே,  மரணத்தை  எண்ணி    கலங்கிடாமல்,
தருமன் போற்றிய  மாதரி  வழி நின்ற , மா வீரனாக
வடிவமைக்கப்  பட்டிருக்கிறார்,  உங்கள்  தந்தை !

" மரணத்தை எண்ணி  கலங்காதே ! போர் செய், போர் செய் ! "
என்று  விஜயனை  எழுச்சியுறச் செய்த,
கண்ணனின் மனதும் கல் மனதல்ல!

உங்கள்  தாயின்  ஆயுள்,
நான்கு நாட்கள்தான்  என்று  நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,
தாயினும் சாலப் பரிந்து ,
 தன் மனைவியின்  விருப்பங்களையும் ஆசைகளையும்  
மாதரி வழி நின்று பூர்த்தி    செய்த ,
உங்கள்  தந்தையும்,     இரக்கமற்ற  அரக்கனுமல்ல !

உங்களுக்கு  தெரியுமா,  இந்த  நிகழ்வு,  
அந்த  அன்புள்ளங்களின்  ஆத்மார்தமான   ஒப்பந்தம் என்று ?

என்று  உங்கள்  தாய்க்கு  சர்க்கரை நோய் இருப்பதாக  கண்டுபிடிக்கப்பட்டு ,
உணவு முறைகள்  வரையறுக்கப்பட்டதோ,  அன்றே  அவர்கள்  எடுத்த முடிவு ,    " இறப்பதற்குமுன்,  தாம்   விரும்பிய  அனைத்தையும்  உண்டு  மகிழ்ந்துவிட  வேண்டும் "  என்பதுதான்  ! 

மனைவி  விரும்பிய  பொருட்களை,  கைகள்  கனிவுடன் நீட்டினாலும்,
மனது எப்படி  துடித்திருக்கும்,      அந்த  பெரியவருக்கு ?

அவரால்  வாய் திறந்துதான்  சொல்லியிருக்க  முடியுமா,  
" கண்மணியே !   நீ  காற்றில்  கரையப் போகிறாய்,  
 பிரியமானவளே !, நீ என்னைவிட்டு  பிரியப் போகிறாய் " என்று ?. 

அல்லது,  உங்கள் தாயார்தான்  கேட்டிருப்பார்களா 
" மறுக்கப்பட்டவைகள்   ஏன்  அளிக்கப்பட்டன  "  என்று ? .

இரு விழிகள்  கணை  தொடுக்க, 
மற்ற  இரு விழிகள்  உரைத்திருக்கும்,   அந்த  முடிவுரையை ! 

கண்கள்  கலங்கினாலும், ஒரு துளி  கண்ணீரைச்  சிந்தினாலும்,
நீங்கள்  கண்டுபிடித்து விடுவீர்கள்  என்று  கண்ணீரையும்  
கட்டிப் போட்ட  உத்தமன்,  உங்கள்  தந்தை !

அவரையா  குறை  கூறுகிறீர்கள்,  தாயை கொன்றவர் என்று ......?

ஒரு வேளை,  உங்கள் தந்தை  முந்தியிருந்தால்,  
உங்கள் தாயாரும்  செய்திருப்பார்  இதே  செயல்களை,  மன நிறைவுடன் ! 

அப்போது , குறை கூறியிருப்பீர்களா  உங்கள் தாயை ?

 உங்கள் தாயுடன்  நீங்கள் கொண்டிருந்த நெருக்கம் ,  குறை சொல்ல விடாது !

உங்கள்  தந்தை , கண்டிப்புடன் இருந்ததினால், சற்று  விலகியே  
நின்றுவிட்டிர்கள் !

மற்றொரு  உண்மை தெரியுமா உங்களுக்கு ?

உங்களிடம்  கண்டிப்பாக  இருந்த பெரியவர்,
உங்களைக் கொண்டாடும்  சுதந்திரத்தை ,
உங்கள் தாய்க்கு கொடுத்ததின் காரணமென்ன?

" நான் கண்டிப்புடன் இருக்கிறேன்,  
நீ கண்ணின் கருமணியைப் போல் கருதி, காப்பாற்று"
என்ற  நிலைப்பாடுடன்  வாழ்ந்தவர்கள்,  உங்களைப் பெற்றவர்கள் !

உங்களின் இன்றைய சிறப்பான  நிலைமைக்கு, தந்தையின் கண்டிப்பும், 
தாயின்  பாசமும், பரிவும்  அல்லவா  காரணங்கள் !

தவறு ,  செல்லங்களே !
தவறு !

நீங்கள்,   உங்கள்  தந்தைமேல்  கொண்ட  பார்வை , தவறு !

தாயை  உங்களிடமிருந்து  பிரித்துவிட்டார்  என்ற  தவறான பார்வையினால்,
நீங்கள்  அவருக்கு  கொடுத்த  தண்டனை,  உங்களை  அவர் பிரிந்திருப்பது !

"  தாயிற் சிறந்த ஒரு  கோயிலும் இல்லை  "   என்பதை உணைந்த  நீவிர் ,
"  சுற்றத்திற்கு  அழகு  சூழ  இருத்தல் "  என்பதனை  மறந்ததும்  ஏனோ ?


பெற்றவர்க்கு இல்லை  குற்றமும்  சினமும்  "  என்ற  மூதாட்டியின்
மூதுரைப்படி  , நீங்கள் கொடுத்த   தண்டனையையும்  புன்சிரிப்புடன்
ஏற்றுக் கொண்ட பெருந்தன்மையாளன் , அவர் !

குறை ஒன்று சொன்னால், உங்களின் சீரான  வாழ்க்கையில்
சுருக்கங்கள்  வந்துவிடுமோ  அன்று அஞ்சி, எதையும்
நிறைவாகவே  கொண்ட  உத்தமன் ,  உங்கள் தந்தை !

" யாம் பெற்ற  இன்பம்  பெறுக  இவ்வையகம் "   என்பதற்கு  மறு மொழியாக
"  நான் பெற்ற துன்பம்,  இனி  எவருக்கும் வேண்டாம் " என்ற
 நினைவுடன், தன்  மரணத்திலும்  பிறர் நலம்  காண  நினைத்த  நல்லவர்,
உங்கள்  தந்தை !

நாளை,  அவர் கனவு  மெய்ப்படும்போது,  அவர் வாழ்க்கை
காவியமாகும் !

அவரைப் பற்றிய  எழுத்துக்களும்  காவியமாகும் !

போற்றுங்கள் !

உங்கள்  தாய்க்கு,
தாயுமானவனாய்  நின்ற  உங்கள்  தந்தையை
போற்றுங்கள் !

மனைவிக்கு,
மருத்துவனாய்  நின்று  சேவை செய்த
மா மனிதனைப் போற்றுங்கள் !

நாட்டு  மக்களும்
நலம் காண  வழி வகுத்த
நல்லவனை  போற்றுங்கள் !


இறுதியாக.

பெரியவரின்  " நல்ல மனம் வாழ்க,  நாடு போற்ற  வாழ்க "  என்று  வாழ்த்தி,
வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி  விடை பெறுகிறேன் !

0-0-0-0-0-0-0-0-0-0-0-0-


















































  


























1 comment:

  1. விமரிசையான விமர்சனம் ஐயா..
    பரிசு பெற்றதற்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

    ReplyDelete