Saturday 14 June 2014


" முன்னெச்சரிக்கை முகுந்தன் ! "   ( VGK 20  )

எந்த  வேலையை செய்தாலும்  அதற்கு  முன் எச்சரிக்கை தேவைதான்.  இதில்  தவறுவதால் ஏற்படும்  சங்கடங்கள்  எல்லோர்  வாழ்க்கையிலும்  ஏதாவது  இருக்கும் . இதில்  கிடைக்கும் அனுபவங்கள்  சிலருக்கு  வேடிக்கையாக இருக்கும் , சிலருக்கு வேதனையாக இருக்கும்.  இதைத்தான்  உணர்த்தியிருக்கிறார கதாசிரியர், தன்னுடைய " முன்னெச்சரிக்கை  முகுந்தன் " என்ற கதையில். 

அதற்கான இணைப்பு:-  


என்னுடைய  விமர்சனம்  இரண்டாம்  பரிசை  வென்றிருக்கிறது !
என்  எழுத்தினை  தேர்வு செய்து, பரிசுக்கு  உரியதாக்கிய  திரு . நடுவர்  அவர்களுக்கும், 
கதாசிரியர்  திரு. VGK   அவர்களுக்கும்  என் மனமார்ந்த நன்றிகள் !


என் எழுத்துக்கள் !


கதாநாயகனுக்கு  ஐம்பது வயது ! சில வியாதிகளுடன்,  ஞாபக மறதியும்  வேறு ! ஞாபக மறதியினால் வரும்  தொல்லைகளைப் போக்க , கதா நாயகன்  கையாண்ட  யுக்திதான்       " செக் லிஸ்ட் " .  

அலுவலகத்திற்கு  செல்லும்  அவசரத்தில், மறந்து போகும்  விஷயங்கள் பல ! பர்சை  மறப்பது , அலுவலக / மேஜை ட்ராயரின்  சாவியை மறப்பது, சில முக்கியமான பைல்களை  வீட்டிலேயே  வைத்து விட்டு வருவது  அல்லது அதற்கு பதிலாக  வேறு  எதையாவது  எடுத்துக் கொண்டு  வருவது  போன்ற  நிகழ்ச்சிகள்  சர்வ சாதாரணம். இதைத் தவிர்ப்பதற்காக ,  கதாசிரியர்  தன் கதா நாயகன்  மூலமாக  நமக்கு கொடுத்திருக்கும்  அறிவுரைதான் " செக் லிஸ்ட் " .  தான் சொல்ல நினைப்பதை  நேரடியாக  சொல்லாமல் ,  ( நகைச் ) சுவையாக , கதா நாயகனின்  செயல்களாக  விவரித்திருக்கிறார் . 

இந்த  செக் லிஸ்டில் கதாசிரியர்  பட்டியலிட்டு  இருப்பது :

அலுவலக அடையாள அட்டை, 
வீட்டு விலாசம் + தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு, 
பஸ் சார்ஜுக்கு வேண்டிய சரியான சில்லரைகளுடன் கூடிய மணிபர்ஸ், 
அதில் ஒரு தனி அறையில் ரிஸர்வ் கேஷ் ஆக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, மூக்குக்கண்ணாடி + அதற்கான கூடு, 
மூன்று வேளைகளுக்கான மருந்து மாத்திரைகள், 
டிபன் பாக்ஸ், 
வெற்றிலை பாக்குப்பெட்டி சுண்ணாம்பு டப்பியுடன், 
பல் குத்தும் குச்சிகள், 
காது குடையும் பஞ்சுக்குச்சிகள், 
கைக்கடிகாரம், 
பேனா, சின்ன பாக்கெட் நோட்டு, 
ஆபீஸ் ஃபைல்கள், 
செல்போன், சார்ஜர், 
ஆபீஸ் டிராயர் சாவி, 
குடை, 
பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள் அல்லது செய்தித்தாள், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட், கர்சீஃப், 
துணிப்பை - ஆபீஸ் முடிந்து திரும்புகையில் காய்கறி  வாங்க ,
இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு, 
வேஷ்டி, துண்டு, 
செருப்புகள் . 

இந்த  பட்டியலில் , எதை தவறு என்று சுட்டிக் காட்ட முடியும் ?  அல்லது  தேவையற்றது என்று சொல்ல முடியும் ?  

வேஷ்டியும், துண்டும் , அரைஞாண்   கயிறும் சிரிப்பை  உண்டாக்கலாம் ! 

ஆண்களுக்கே  வரக்கூடிய  " குடல் இறக்கம் " என்ற நோயை எளிதில் தடுக்கக் கூடிய வழி இந்த அரைஞாண்  கயிற்றை  உபயோகிப்பதுதான் . இதை  அறிந்ததால்தான், கதாசிரியர் இதை  நாயகனின் செயலாக  விவரித்திருக்கிறார். 

வேஷ்டியும், துண்டும் பட்டியலில்  இடம் பெற்றதற்கு காரணம்,  நாயகனின்  சோகமான அனுபவம். "  அது நடந்து முடிந்த கதை, இப்போதுதான்  ஆடையெல்லாம்  சீராக  இருக்கிறதே, இந்த  வீண் சுமை எதற்கு ? " என்ற வாசகர்களின் கேள்விக்கு , நாயகனின் முன்னெச்சரிக்கைதான்  காரணம் என்பதுதான்  பதில். இந்த வேஷ்டியும் , துண்டும் இதுவரை  உபயோகப்படவில்லை,  ஆனால்  இதற்கு மேல் , கதாநாயகனுக்கோ அல்லது வேறு யாருக்கோ , சமயத்தில் சஞ்சீவியாக  உபயோகப்படலாம் அல்லவா ?

சனிகிழமை என்பதால்,  அரை நாள் மட்டும் ஆபீசில்  தலையைக் காட்டிவிட்டு  வீட்டுக் வந்த  கதாநாயகன் , மறு நாள்  சென்னை செல்ல வேண்டும் , தன் மகனுக்கு  பெண்         பார்ப்பதற்காக !  சாதரணமாகவே  முன் எச்சரிக்கையுடன்  சும்மா இருப்பாரா? 

மறுநாள்  சென்னை செல்ல தேவையானதை  எல்லாம்  " செக் லிஸ்ட் " போட்டு  சரி  பார்த்து வைத்து விட்டு, ஓட்டலில் இருந்து வந்த உணவையும் உண்டு விட்டு  உறங்க  ஆரம்பிக்கிறார். அப்போது  அவருடைய  எண்ணமெல்லாம், மறு நாள்  காலை,  6.30க்கு புறப்படும்  பல்லவன் எக்ஸ்பிரஸ்ஸை  தவற விடக்கூடாது  என்பது தான் ! 

உறங்கிக்  கொண்டிருந்த  அவரை  எழுப்பியது, மழை !  கடிகாரத்தைப்  பார்த்தார் . மணி  5.30.   

அவர் எண்ணமெல்லாம், 6.39க்குள்  ரயிலைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் !  போர்க்கால நடவடிக்கை போல , எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, புறப்பட்டு விட்டார், ரயில் நிலையத்திற்கு ! 

கொட்டுகின்ற  மழையில்,  மரத்தில் இருக்கும்  கிளி பொம்மையை  குறி வைத்த  விஜயனைப் போல் , வேறு எதைப்பற்றியும்  யோசிக்காமல், கவலைப்படாமல்,  6.30க்கு  திருச்சியில் இருந்து புறப்படும் " பல்லவனை " பிடிப்பதற்காக, ஸ்ரீரங்கம்  இரயில்  நிலையத்துக்கும்  வந்து விடுகிறார், கதா நாயகன் ! 

இரயில்  நிலையத்தில்தான் தெரிகிறது, அவர்  ஞாயிறு  காலை 6.30க்கு  புறப்படும்  பல்லவன் எக்ஸ்பிரசுக்கு அவர் சனிக்கிழமை மாலை  6.30 க்கே  வந்திருப்பது !  அவரைப் பார்த்து எள்ளி நகையாடுவது, பிளாட்பாரத்தில் இருக்கும்  கடிகாரமும், வாசகர்களும் தான் !

இதற்கு காரணம், "  எவ்வளவு  முன் எச்சரிக்கையுடன்  இருந்தாலும், கடைசியில் கோட்டை  விட்டு விட்டாயே,  முன்னெச்சரிக்கை  முகுந்தா ,  வீட்டை விட்டு  புறப்படும் முன் , இன்று  என்ன  கிழமை என்று  பார்த்துவிட்டு  புறப்படக்கூடாதா ? "  என்ற எண்ணம்தான் ! 

ஆனால்.  கதா நாயகனின் தன்னம்பிக்கை  என்னை பிரமிக்க வைக்கிறது .    

" எல்லாவற்றையும்  சரி பார்த்துவிட்டேன், நான் செய்வது சரியே " என்ற கதா நாயகனின் எண்ணமும், தீர்மானமும் கதாநாயகனை பாராட்ட வைக்கிறது .

சிறு  தவறு  நடந்து விட்டது !  அதற்கு காரணம்,  அதிதமான  முன்னெச்சரிக்கையா ? அல்லது , அந்த பாழாய் போன  ஞாபக மறதியா ? இதற்கு  ஆறுதலாக  கதா நாயகன் , தனக்குத்தானே கூறிக் கொண்ட சமாதானம், " அன்றைய ராசி பலனில், அவருடைய ராசிக்கு குறிப்பிடப் பட்டிருந்த  ' வீண்  செலவும், வீண் அலைச்சலும் " .   

எனக்கு  நம்பிக்கை இருக்கிறது, அடுத்த முறை  கதா நாயகன் இந்த தவறை செய்ய மாட்டார்  என்று ! ஏனென்றால்,  " இன்றைய தேதியையும் , கிழமையையும் சரி பார்த்துக் கொள் "  என்ற வாசகம் அவருடைய  " செக் லிஸ்டில் "  சேர்ந்துவிடும் !!

o-o-o-o-o-o-o-o





















































என்று சகல சாமான்களையும் லிஸ்ட் போட்டு, வீட்டினுள் ஒரு பெரிய கரும்பலகையில் எழுதி, கண்ணில் படும்படியாக தொங்க விட்டிருப்பார். ஏழு மணிக்கு பஸ் பிடிக்க ஆறரை மணிக்கே ரெடியாகி லிஸ்டில் உள்ளபடி எல்லா சாமான்களையும் தினமும் ஒரு முறை சரிபார்த்துக்கொள்வார். பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட


Sunday 1 June 2014



துளியில்  ஒரு கடல் ---  


விமர்சனப் போட்டிக்காக    திரூ. வை. கோபாலகிருஷ்ணன் 
அவர்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  கதை ,
அவர்  எழுதிய  
 "ஏமாற்றாதே ! ஏமாறாதே !! "    (  VGK 18  )
என்ற  சிறுகதை.

அதற்கான  இணைப்பு : 



கதையின்  தலைப்பிலேயே,  கதையின்  கருத்தைச்  சொல்லிவிட்டார் , ஆசிரியர்.  பிறரை   ஏமாற்ற நினைத்து ,  நீ  ஏமாந்து போகாதே !  என்றதொரு கருத்தினை  ஒரு  சாதாரண , அன்றாடம்  நடக்கும்  ஒரு  நிகழ்ச்சியின்  வாயிலாக  வெளிப்படுத்தியுள்ளார்.  கதையின்  ஊடே , சராசரி  மனிதர்களின்  எண்ணத்தையும் , நிலைப்பாட்டையும்   தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார் ,  கதாசிரியர். 

கதையின்  கடைசி வரியை  , வாழ்க்கையின்  யதார்த்தத்தை , விதியின் விளையாட்டை ,  துர் ஆசைகளின்  துரிதமான  முடிவுரையைக்  குறிப்பதாக " தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார் " என்று எழுதியிருக்கிறார். 

இக்கதையில், கதா நாயகனின்  செயல்பாட்டை, மன நிலையை  பல  வித்தகர்கள்,  வித விதமாக  விமர்சித்து  விடுவார்கள் ! 

ஒரு  வயோதிக, அன்றாட வாழ்வாதரத்திற்காக  உழைக்கும்  பெண்மணியிடம் ,  தேங்காய்  வாங்குவதற்காக  பேரம்  பேசுவது  தவறல்ல,  ஆனால்,  அவளை  ஏமாற்றி  ஒரு தேங்காயை  திருடுவது  என்பது,  ஒரு பண்பான , நாகரீகமான , நல்ல நிலையில் , நல்ல உத்தியோகத்தில் இருக்கும் , மனிதனின்  செயலல்ல  என்பதைச்  சுட்டிக் காட்டவே,  திருடிய தேங்காயை  அழுகலாக்கி, செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக  கதையை  முடித்திருக்கிறார்,  கதாசிரியர். 

" செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைக்கும் "  என்ற வரியை  , ஒரு  சாதாரணமான வரியாகக்  கருத முடியவில்லை,  என்னால். 

" கடமையைச் செய் !  பலனை  நான்  தருகிறேன் ! "  என்று,   கண்ணனின் வாக்காக, கீதை கூறுவதின்  மறு மொழியல்லவா, இக்கதையின்  கடைசி   வரி ! 

" செய்த  தவறுக்கு  சரியான  தண்டனை  உண்டு " .  இக்கருத்தைச் சொல்லாத  புராணங்கள் உண்டா ?  அல்லது கதைகள்தான்  உண்டா ? 

இந்த ஒரு சிறிய வரிக்குள்  ஒளிந்திருக்கும்  கதைகள் எத்தனை, அறிவுரைகள் தாம்  எத்தனை , எத்தனை .. ?

எனக்குத் தோன்றிய சில  கதைகளைப் பட்டியலிட்டு,  விமர்சனத்தை  எழுதியிருக்கிறேன் !

அந்த விமர்சனம்..... இதோ !

O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O


கதையின்  தலைப்பிலேயே,  கதையின்  கருத்தைச்  சொல்லிவிட்டார் , ஆசிரியர்.  பிறரை   ஏமாற்ற நினைத்து ,  நீ  ஏமாந்து போகாதே !  என்றதொரு கருத்தினை  ஒரு  சாதாரண , அன்றாடம்  நடக்கும்  ஒரு  நிகழ்ச்சியின்  வாயிலாக  வெளிப்படுத்தியுள்ளார்.  கதையின்  ஊடே , சராசரி  மனிதர்களின்  எண்ணத்தையும் , நிலைப்பாட்டையும்   தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார் ,  கதாசிரியர். 


வண்டியில்  பெட்ரோலை  நிரப்பிக் கொண்டு,  ஒரு  பெரிய  செருப்புக் கடைக்கோ,  ஜவுளிக்கடைக்கோ, அல்லது  நகைக்கடைக்கோ சென்று  எதையும்  பேரம்  பேசாமல்,  பேச முடியாமல் ,  கேட்கும்  காசைக் கொடுத்து விட்டு  வரும்  மனிதர்கள்,  ஏழு ரூபாய்க்கு  வாங்கும்  தேங்காய்க்கு ,  அதுவும்  ஒரு  தள்ளாத,  வயது முதிந்த  கிழவியிடமோ  ,  அல்லது,  அன்றாட வாழ்வாதாரத்திற்காக  உழைக்கும்  சிறு வியாபாரிகளிடமோ,  பேரம்  பேசும்  அல்பத்தனத்தை  எள்ளி  நகையாடியிருக்கிறார் ,  கதாசிரியர்.  

இக்கதையின்  நாயகன் ,  பதினைந்து  வருடங்களுக்கு  முன்னாள்  நிறைவேற்ற  வேண்டிய  வேண்டுதலுக்காக , ஒரு கிழவியிடம்  பன்னிரண்டு  தேங்காய்களை  பேரம் பேசி ,  பதிமூன்று  காய்களை  எடுத்துக் கொண்டு,  பன்னிரண்டு காய்களுக்கு  மட்டும் கணக்குப்   போட்டு, காசைக்  கொடுக்கும்  போது   அதிலும்  விலையைக் குறைத்த ,
சாமர்த்தியமான  சந்தர்ப்பவாதி !  

அப்போதும்  ஒரு  ஆதங்கம் , அவனுக்கு !  பதினைந்து  வருடங்களுக்கு  முன்னரே ,  இந்த  பிரார்த்தனையை நிறைவேற்றி இருந்தால்,  இந்த  செலவு  மிகவும்  குறைந்திருக்குமே  என்று !  



" தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார் "   என்ற  கடைசி  வரியுடன்  கதையை  முடித்திருக்கிறார்,  ஆசிரியர் . கதாசிரியரின் இந்த  கருத்துக்கு,   மாற்றோ  அல்லது  எதிர்  வாதமோ இருக்கவே  முடியாது !   

மற்றவர்களை  ஏமாற்றி  வெற்றி  பெற வேண்டும்  என்ற  எண்ணம்  படைத்தவர்களுக்கெல்லம்  கிடைத்த  பரிசு,   தண்டனையே ! பல  இடங்களில்  மரணமே  பரிசாக  வழங்கப்பட்டிருக்கிறது, புராணங்களிலும்,  கதைகளிலும் !  என் அறிவுக்கு எட்டிய  சிலவற்றைப் பட்டியலிடுகின்றேன் !

தேவர்களின் புகழையும் , செல்வத்தையும்  காப்பதற்காக ,  விசித்திர வசு 
என்ற  அசுர குருவை  குருவாகக் கொண்டு  ஒரு  யாகத்தை, பிரமனின்  ஆணைப்படி  தொடங்குகிறான் , இந்திரன்.  ஆனால்,  குருவாக  அமர்ந்திருக்கும்  அசுர  குரு , இந்திரனை ஏமாற்றி,  அசுரர்களுக்கு  ஏதுவான  மந்திரங்களைச் சொல்ல,  விபரீதமான  விளைவுகள்  ஏற்படுகிறது.  இந்திரனை  ஏமாற்றிய,  விசித்திர  வசுவுக்கு  கிடைத்த  தண்டணை ,  இந்திரனின்  வஜ்ராயுதத்தால்  மரணம்.

இராமாயணத்தில்,  இராவணனுக்கு  உதவுவதற்காக,  பொன்மானாக  வேடமிட்டு,  இராமனையும், சீதையையும் ஏமாற்றிய  மாரீசனுக்கு கிடைத்த பரிசு,  ராம பாணத்தால்  மரணம்.

அதே  இராமாயணத்தில்,  எதிரிகளை  வெல்ல வேண்டும்  என்ற  எண்ணத்தில்,  எதிரிகளின்  பலத்தில்  சரிபாதியை  கவர்ந்துவிடும்  வல்லமை படைத்த  ஒரு மாலையை அணிந்து கொண்டு ,  எதிரிகளை  ஏமாற்றி, தந்திரமாக  அவர்களை  பலமிழக்கச் செய்து,  பல  வெற்றிகளை  தனதாக்கிக் கொண்ட  வாலிக்கு  கிடைத்த பரிசு,  ராம பாணத்தால் மரணம். 

மகா  பாரதத்தில்,  தான்  ஒரு  அந்தணன் என்று  பொய் உரைத்து,  பரசுராமரை  ஏமாற்றி ,  வித்தை கற்றுக் கொண்ட  கர்ணனுக்கு  கிடைத்த பரிசு,  "  கற்றுக் கொண்ட  வித்தை,  தக்க சமயத்தில்  பயன்படாது  போகட்டும் "  என்ற  சாபமும்,  அதன் விளைவாக  அவன்  மரணமும் .

இங்கு,  மகா பாரத  நிகழ்வுகளை  மட்டும்  கருத்தில் கொள்கிறேன், என் துணைக்கு ! 

அன்று ,  பரசுராமரை   ஏமாற்றி, கற்றுக் கொண்ட  போர் வித்தைகளும் ,
தந்திரங்களும்  கர்ணனுக்கு  பயன் பட்டது,  பல நாட்டு  மன்னர்களை  வெற்றி கொள்ள !  அப்படி  கர்ணனிடம்  தோற்றுப் போன  மன்னர்கள்தாம் 
துரியோதனனுக்கு  துணையாய் இருந்தனர்,  மகா பாரதப் போரில் .

இன்று,  கதா நாயகன்  பையிலிருக்கும்  பதிமூன்று  தேங்காய்களில் ,
பன்னிரண்டு  காசு கொடுத்து  வாங்கியது,  மற்றொன்று   ஏமாற்றியது !
உச்சிப் பிள்ளையார்,  அடிவாரத்திலிருக்கும் கீழ்  பிள்ளையார்,  சுற்றியிருக்கும் வீதிகளில் உள்ள  பிள்ளையார்கள்  பத்து  என  மொத்தம்  பன்னிரண்டு  தேங்காய்களை பையிலிருந்து  எடுத்து  சிதறு காய்களாக  உடைத்திருக்கிறார்,  கதா நாயகன் .    அனைத்துக் காய்களும் மிகவும் அருமையாகவும், பளீரென்று வெளுப்பாகவும், நல்ல முற்றிய காய்களாகவும், தூள்தூளாக உடைந்து சிதறியிருக்கிறது.   வேலை  கிடைக்க வேண்டும்  என்ற  எண்ணத்தில்  பதினைந்து  வருடங்களுக்கு முன்னால்  நேர்ந்து கொண்டது , இன்று நிறைவேறியது,  வேலை  கிடைத்த பின்  சம்பாத்தித்த  பணத்தைக் கொண்டு வாங்கிய  தேங்காய்களால்.  அவர்  காசு கொடுத்து வாங்கிய  பன்னிரண்டு  தேங்காய்களும்  பயன்பட்டு விட்டது,  பிரார்த்தனையை  நிறைவேற்ற !

அன்று,  விஜயனை  வெற்றி கொள்வதற்காக  கர்ணன், பரசுராமரை  ஏமாற்றி     கற்ற வித்தை ,  பிரமாஸ்திரம்.  அது அவனுக்கு  உதவவில்லை,  விஜயனுடன்  போரிடும்போது ! 

இன்று,  நேர்த்திகடனை  செலுத்திவிட்டு,  தேங்காய்க்காரியிடம்  ஏமாற்றிய  ஒரு தேங்காயுடன்  வீடு  திரும்புகிறார்,  கதா நாயகன் .  உடைத்துப் பார்த்தால் , அந்த   தேங்காய்   அழுகல்.  பதிமூன்று தேங்காய்களில் , எது அழுகல் என்று  எடுத்தவருக்கும் தெரியாது,  விற்றவளுக்கும் தெரியாது. ஆனால் ,  ஒரே  பையிலிருந்த  13 காய்களில்,  12 நல்ல காய்கள் மட்டும்  சேர வேண்டிய  இடத்தை  சேர்ந்துவிட்டது.  ஏமாற்றிய  ஒன்று மட்டும் , ஏமாற்றியவருக்கு  பயன்படவில்லை ! 


இதை  விந்தை  என்பதா ?  விதி  என்பதா...  ?

எதுவாயிருந்தாலும்,  செய்த தவறுக்கு சரியான தண்டனை என்பதுதான்  தீர்வு. 

கதையின்     தலைப்பு  " ஏமாற்றாதே , ஏமாற்றாதே ,  ஏமாறாதே,  ஏமாறாதே ! "  என்ற  M . G . R . இன்  படப் பாடலை  நினைவுறுத்துகிறது.   அதுமட்டுமல்ல ,

ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு 
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு 
பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு 
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு 
இன்றோடு போகட்டும் திருந்தி விடு 
இன்றோடு போகட்டும் திருந்தி விடு 
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு

என்ற  மற்ற   வரிகளையும்  முணுமுணுக்க  வைக்கிறது. 

இன்றைய சமுதாயத்திற்கு நல்லதொரு  கருத்தினையும், படிப்பினையையும் ஊட்டக் கூடிய  ஒரு சிறந்த   கதையைப் படைத்த கதாசிரியருக்கு, ஆயிரம்  நன்றிகள்,  அனந்த கோடி நமஸ்காரங்கள் !!


O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O